வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா மே 6ல் தொடங்குகிறது

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சித்திரை திருவிழா மே 6ல் துவங்கி மே 13வரை எட்டு நாட்கள் நடைபெற உள்ளது.

வீரபாண்டி கௌமாரியம்மன் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயில் சித்திரை விழாவிற்கு தென் மாவட்ட அளவிலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் உத்தரவில் கம்பம் தேர்வு செய்து கண்ணீஸ்வர முடையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று கம்பம் மற்றும் கரகம் அலங்கரிக்கப்பட்டு முல்லை பெரியாற்றங்கரையில் இருந்து சுமந்து சென்று கோயிலில் கம்பம் நட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் வேண்டுதலுக்காக முல்லை பெரியாற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டனர். தினமும் ஏராளமான பக்தர்கள் காலையில் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபடுவது வழக்கம். சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது.

திருவிழா நாட்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார். முக்கிய நிகழ்வான தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது. அம்மன் 22 நாட்கள் விரதம் இருப்பதால் நைவேத்தியமாக தெள்ளுமாறு மட்டும் படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *